திங்கள், 4 நவம்பர், 2024

கவிதை பற்றி கவிதை

 


silaiyeduththaan antha sinnappennukku...movie song (sarvar sundaram)


அந்த பெண் சிலையைப்பார்த்து தான்

அந்தக்கவிஞன் 

அவ்வளவு ஆற்றாமையுடன்

எழுதினானா..?

"சிலையெடுத்தான் அந்த‌

சின்னப்பெண்ணுக்கு..."

கவிஞர்கள் நெஞ்சில்

வலிமை மிக்க பேனா இருக்கிறது.

அதனால் தானே

அந்த கடல் அலை இரைச்சல்கள்

அவர்களுக்கு 

அவை குறட்டைகள் ஆயின.

அதனால் தான்

போதும் 

தூங்கியது 

கடல்களே எழுந்திருங்கள்

எங்கள் "தமிழ்ப்பெண்ணை"

பண் பாடுங்கள்

என்று உங்கள் பேனா

கடலின் முதுகில் தட்டி

எழுப்பியிருக்கிறது.

_________________________________________சொற்கீரன்

ஈரோடு தமிழன்பன் கவிதை பற்றி கவிதை

எழுதியது

04.11.24

_______________________________________________________________________




ஞாயிறு, 3 நவம்பர், 2024

மெல்லொலிகள்.

 

மெல்லொலிகள்.
________________________________________
சொற்கீரன்.

மக்களே மக்களே
என் குரல் கேட்கிறதா?
உங்கள் காலடிகளில் உங்களாலேயே
மிதித்துக்கூழாக்கப்படும் குரல் தான்
அந்த குரல்.
உங்கள் குரல் தான் என் குரல்.
உங்கள் அவலங்களின் மௌனத்தில்
அது மேலெழும்பிக்கொண்டு தான் இருக்கிறது.
உங்கள் புண்பட்ட முணுமுணுப்புகளிலும்
அது ரீங்கரித்துக்கொண்டு தான் இருக்கிறது
கொத்து கொத்தான ஈக்களின் கூட்டங்கள் போல்.
கடவுளோடு
உங்கள் வாய்கள் தைக்கப்பட்டிருக்கின்றன.
சடங்கு சம்பிரதாயங்களில்
நீக்கள் பிணங்களின் சிப்பங்கள் போல்
கட்டி வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
உங்களை குண்டுகள்
சல்லடையாக்கத் தேவையில்லை.
உங்களுக்கான காரணங்கள்
நீங்கள் விழுந்து கிடப்பதற்கான‌
வரலாற்றுக்கந்தல்களின் தோரணங்கள்
உங்கள் பஞ்சடைந்த கண்விழிகளில்
எழுச்சிமிக்க விடியல்களை
தரிசிக்க இயலாத ரத்தம் கசியும்
மனக்காயங்கள்
உங்கள் குடல்களை அடிக்கடி
தூணை பிளந்து கொண்டு வரும்
நரச்சிங்கங்கள் கிழிப்பதான கோரக்கனவுகள்
மற்றும் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரைகள்
இத்யாதி இத்யாதி...
எல்லாம் உங்களை
சடலங்களின் குப்பைகளாய்த்தான்
தெருவில் வீசியெறிந்திருக்கின்றன.
சாதி ஏற்பாடுகள்
ஒரு மனிதனின் கத்தி
இன்னொரு மனிதனின் கழுத்தில் தான்
என்று
பிரம்மனே சொல்லிவிட்டதாய்
ஆதிக்கம் செலுத்தும்
அந்த ராட்சச எந்திரம்
கோரைப்பல் நற நறக்கும் பயங்கரத்தில்
சுக்கு நூறாகித்தான் கிடக்கிறாய்.
அப்புறம் எதற்கு உன்னை அழிக்க‌
ஆளும் அம்பும் படைகளும்.
மக்களே மக்களே
உங்கள் இதய அடுக்குகளின்
அடித்தட்டில் கிசு கிசுக்கும்
இந்தக்குரல்களை உங்கள் செவிகளில்
பட விடுங்கள்.
இந்த விளம்பரக்கூச்சல்கள் நடுவிலும்
இந்த கணினிக்காட்டு வேட்டையர்களின்
இரைச்சல்களின் இடையிலும்
அந்த மென்குரலுக்கு
செவி மடுக்க
இதோ இந்த இடுக்குகளின் வழியாக கேளுங்கள்.
இவை சிந்திக்கத்துவங்கிய எரிமலைக்கீற்றுகளின்
நாக்குகள் தடவும் மெல்லொலிகள்.
கேளுங்கள்.
நொறுக்கப்படும் ...ஆம்
உங்கள் அடிமைச்சங்கிலிகள்
நொறுக்கப்படும்.
____________________________________________________

சனி, 2 நவம்பர், 2024

"அரி"யாசனம்

 





கம்பளிப்பூச்சிக்கும் 

"அரி"யாசனம் தந்தவரே!

புழுக்கூட்டு மண்டலத்துள்

புகுவதன் முன்

எழுத்துகள் தானே சாப்பாடு.

சிறகுகள் விரியும் முன்

சிந்தனையின் உறக்கம் தான்.

வண்ணப்பிரளயம் தோன்றட்டும்

முகவரிகள் எல்லாம் 

மலர்கள் தான்.

உங்கள் கவிதைக்குள் இனி

பூங்காக்கள் ஆயிரங்கள்.

______________________________________

சொற்கீரன்

(02.11.24 ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு

ஒரு கவிதை)




அகழ்நானூறு (83)

 

அகழ்நானூறு  (83)

______________________________________

சொற்கீரன்



குறும் பரம் தூம்பொடு முழவும் கறங்க‌

மயிர்க்கண் அதிரும் இமிழ்தல் ஆரும்

இன்னிசை அளபடை பெயரும் பெயரன்

பண்டு சாற்றிய பல்மணிச் சொல்லின்

தீஞ்சுவை நெஞ்சில் கழறும் போழ்தின்

இடையும் போழ்தரும் தண்ணிய வெற்பன்.

பொருள்செய நீங்கிய அருஞ்சுரம் அத்த‌

நண்ணிய காலை நவிலும் காலை

இறைநெரி இன்வளை தும்பிய முரலும்.

என்னொடு தொலைத்த அவன் கழல் ஒலித்த‌

கலிபரி சுவட்டின் பெயல் படுநீரின்

அலைபடு நீழல் அவன் முகம் ஓர்க்கும்

அளியவள் ஆங்கு ஆர்த்த அவையம்

விசும்பும் தரிக்கும் வயங்கொலி இசைப்ப.

___________________________________________________




வெள்ளி, 1 நவம்பர், 2024

Is Gravity RANDOM Not Quantum?

 

குமிழி

_____________



குமிழி உடையுமா? இது தான் பிரபஞ்சம் எனும் கேள்வியின் வடிவம்.இது விடைக்கு காத்திருக்கிறதா?இல்லை "விடை"க்கக் காத்திருக்கிறதா?அணுக்கருவின் பிளப்பும் இணைப்பும் அளப்பரிய ஆற்றல்.அது போல் தான் ஒரு குமிழியின் உடைவும் உருவும் அளப்பரிய தன்மை. 

INFINITY  ENSAPSULATED IN A NUTSHELL THAT IS KNOWN AS UNIVERSE



Is Gravity RANDOM Not Quantum?

கவிதைகளின் பஃறுளி ஆறே!



கவிதைகளின் பஃறுளி ஆறே!

உங்கள் சொற்களின் ஊற்று

எங்கே உளது?

பொருளைத்தேடும் சொற்கள்

மீண்டும் புதுச்சொற்களாய்

ஊறும் தமிழின் 

உள் விசைச் சிமிழ் 

உங்களிடம் உண்டு போலும்!

தமிழ் என்றாலே

கோடி கோடி அண்டங்களை

அடக்கிய சிமிழ் அது எனக்

நீங்கள் கண்டு கொண்டதை

நாங்களும்

கண்டு கொண்டோம் 

கண்டு கொண்டோம்.

கடல்கள் வற்றும்போது

சொல்லி அனுப்புகின்றோம்

உங்கள் தமிழின் 

ஒரு துளிக்காக!

ஒரு துளிக்காக!

வானங்கள் வெறுமையுறும்போது

சொல்லி அனுப்புகின்றோம் உங்கள்

உவமைக்காக!

உவமைக்காக!

_______________________________________

சொற்கீரன்

(01.11,24 ல் ஈரோடு தமிழன்பனின் 

கவிதை பற்றிய கவிதை)

விழித்துக்கொள்ளுங்கள்.

 விழித்துக்கொள்ளுங்கள்.

________________________________________

சொற்கீரன்



8 லட்சமா? 5 லட்சமா?

ஜனநாயகக் கடலின் பிஞ்சுகள்

சங்கமம் ஆனது 

அரசியல்

சரித்திர ஏடுகளில்

சல சலக்குமா?

தெரியவில்லை.

கட் அவுட்டுகள் நிமிர்ந்து சொன்ன‌

வெளிச்சங்களில்

புதிய விடியல் தோன்றுமா?

சாதி மத தோட்டாக்களைக்கொண்டு

செய்த‌

துப்பாக்கிக்கண்கள் வழியே

மக்களை உற்றுநோக்கும்

நுட்ப அதிகார வீச்சில்

மக்களின் 

சிந்தனை நாற்றுகளின் பயிர்கள் 

எழுமா? இல்லை விழுமா?

பொம்மலாட்டங்களின் நிழல்களிலா

புதிய உலகம் கண் விழிக்கும்?

பாயசத்தோடு ஃபாசிசம்

ஒப்புமைப்படுத்தியதில்

நமக்கு ஒன்று புரிகிறது.

இனி அவர்களின் கட் அவுட்டுகள்

ஹிட்லர் முசோலினிகளுக்குத் தான்.

விழிப்புடன் இருங்கள் மக்களே!

உங்கள் கண்களை விற்று

ஒரு விடியலின்

கனவுக் குமிழிகளை வாங்கிவிடும்

ஒரு வர்த்தகத்தின் 

விளம்பரம் உங்கள் மீது

எச்சம் இடும் அவலங்களை 

எதிர் கொள்ளப்போகிறீர்கள்.

விழித்துக்கொள்ளுங்கள் மக்களே!

விழித்துக்கொள்ளுங்கள்.


______________________________________________________