மாரிசெல்வராஜ் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
______________________________________
சங்கம் வைத்து
சரித்திரம் சுடர்ந்த
சங்கத்தமிழை
சங்கம் வைத்து
கழுவேற்ற வந்தன
சாதிகள்..மதங்கள்.
மாரிசெல்வராஜ் எனும்
மனிதம் காக்க ஒரு
மாவீரன் வந்தான்.
மூச்சுப்பிடிக்கும்
முத்துக்குளிப்பில்
முக்கூடல் சங்கமம்
முழுதாய் கண்டான்.
கண்மண் தெரியா
முரட்டுக்காளையின்
கொம்பு சிலிர்ப்பில்
மண்ணும் விண்ணும்
கண்திறந்தது காண்மின்.
நம் வெறியில் அவர்
வேள்விகள் வார்த்தார்.
நம் உயிரில் அவர்
மஞ்சக் குளித்தார்.
குளித்தது போதும்
நம் ரத்தம் அவர்
குடித்தது போதும்.
காமிராவுக்குள்
காட்டிய காட்டுத்தீ
பரவும் பரவும் அந்த
நச்சுக்காடுகள் அழியும்.
கபடி கபடி என்பது
காட்டுக்கத்தல்
இல்லை இல்லை.
தமிழன் வெற்றிச்
சரித்திரம் இதுவே.
முட்டி மோதி நாம்
அழியவா வந்தோம்?
சாதிச் சேற்றில்
வீழவா வந்தோம்?
முடிச்சு அவிழ்ந்தது.
விடியல் தெரிந்தது.
சூத்திரன் என்றால்
ஆத்திரம் வரணும்
சாத்திரப்பொய்மை
சாய்ந்தே ஒழியணும்.
இயக்குனர்ச் செல்வரே
இமயம் இனி இனி
சொடுக்கும் உம் விரல்.
ஜெய்பீம் மகுடம்
நம் கருத்தின் சிகரம்.
நல் ஒளி காலை இனி
நம் விழி ஓரம்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வெற்றிகள் குவிந்திட
வாழ்த்துக்கள்!!
_______________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக