ஊசியிலைக்காடுகள்............ருத்ரா
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
செவ்வாய், 17 மார்ச், 2026
கண்டு கொள்ளமாட்டேன்.
VANNADAASAN KAVITHAI/17.03.26
உடைந்த சிலேட்
_____________________________________
வண்ணதாசன் அவர்களே
அந்த உடைந்த கண்ணாடியில்
தெரிந்த உங்கள் முகம்
உங்கள் உடைந்த சிலேட்டு
காட்டிய செந்தமிழ் உருவத்தின்
சரித்திரமாக தெரிவது தானே
ஒரு உன்னத கவிதை வடிவம்.
உங்கள் கவிதைகளில்
முற்றுப்புள்ளிகளில் தான்
கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்
காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.
அருமை வரிகள் அவை.
இப்படி ஒரு அழகியலில்
நம் தேச வறுமைக்கந்தலை
அழகாக காட்டியிருக்கிறார்
கி ரா அவர்கள்
வேட்டி எனும் சிறுகதையில்!
வேட்டியின் அந்தக்கிழிசல்
நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து
காட்டும் சரித்திரம் என்பதை
சொல்லாமல் சொல்லியிருப்பார்
கி ரா அவர்கள்.
இலக்கிய மேதைகளுக்கு
எழுதும் வரிகள்
அவர்கள் மடியில் புரளும்
பொம்ரேனியன்கள் தான்
அல்லது
உறுமும் சிங்கங்கள் தான்.
______________________________________
சொற்கீரன்
ஞாயிறு, 15 மார்ச், 2026
பரல் நானூறு....6
பரல் நானூறு.. 6
____________________________________________
திரிமருப்பு மாவென விண்ணுய் விழிதரு
நுதலாள் நோக்கின் கூர் அம்பு துளைக்க
அழல்சிறை அன்ன வெம்மை வேய்ந்த
விதிர்ப்புடன் இவனும் அவள் பால் ஒரு
கொய்சுவல் புரவி பாய்தரும் கலியொடு``
கதழ்பரிந்து ஆர்க்க தழுவல் அன்ன
தாகம் போர்த்த தகைவுடன் நவின்றது
கேட்டு ஆங்கு இடிஉமிழ் வான்போல்
வரி வரி பிளந்து உரைத்தாள் மன்னே.
பொன்னும் பொருளும் குவித்தீர் எற்கு ?
இவள் பொன்னுடல் தீயில் வெந்திடவோ?
இற்றவன் சொன்னான் இமிழ்தரு
அருவிப் பெயல் அன்ன பூவில் சொரிந்து.
பொருள்வயின் எதிர்க்கும் சூர்நிறைக்
காடு பூம் அத்தம் கடும்பரல் தூஉய்
கிடைப்படும் அலரிப் பறந்தலை அன்ன
ஆங்கு அவிர்தலைச் செயிர்த்து
அணைந்த காலை நின் முறுவல் அற்றே
அணிக்குடை விரிக்கும் சுடு கதிர்
எல்லனும் தண்ணிழல் தகையும்.
நம்மின் நெஞ்சம் நிறையும் படு
நல்கூர் ஆங்கு வறளும் முற்றும்மே!
----------------------------------------------------------------
கவிதை தந்தான் வைரமுத்து.
சனி, 14 மார்ச், 2026
நடு நிசி நடை....
வண்ணதாசன் கவிதை (முகநூல் 14.03.2026)
_______________________________________________________
" மன்னியுங்கள். உங்கள் உறவினர் பிடிவாதமாக இறந்து போயிருக்கிறார்"
வண்ணதாசன் அவர்களே
இப்படியொரு தலைப்பை
உங்கள் தூரிகையின் மயிர்ச்சிப்பம்
இறுதியில் இழுவித்தந்ததில்
மின்னல் உயிர்ப்பு அல்லவா
இழையாடி நிற்கிறது.
அந்த ஓவியன் தவிப்பு.
நடு நிசி நடை.
இன்னும்
அந்த நின்றே போய்விட்ட
இதயப்பொந்துக்குள்ளிருந்து
உயிர்த்தெழுந்த ஒலிக்கீறலாய்
விம்மிப்புடைத்த ஒரு கிளிமொழி இது!
___________________________________________________
சொற்கீரன்
வியாழன், 12 மார்ச், 2026
என்னைக் கும்பிடு
12.03.2026
__________________________________________
Feed posts
Vannadasan Sivasankaran S
பிடித்தவை
·
10ம.நே
·
உண்மையாக இருந்தான்.
அவனுடைய முதுகில் குத்தினார்கள்.
குப்புற விழாமல் மல்லாந்து விழும்போதும்
அவன் முகத்தில். இயல்பான சிரிப்பு இருந்தது.
மேற்கொண்டு நெஞ்சில் குத்தினார்கள்.
குறுவாளை உருவுகிறவனைப் பார்த்து, 'உன் சட்டைப் பித்தான்களை மாற்றிப் போட்டிருக்கிறாய் ' என்றான்.
அவன் வாயில் மிதித்தவனின் குதிங்காலில்
பித்தவெடிப்பு இருந்தது என்பதே அவனுடைய கடைசிக் காட்சியாக இருந்தது.
உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடியவர்கள்
__________________________________________________________________
வண்ணதாசன் அவர்களே...
ஒரு கன்னத்தை அடித்தால்
மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு.
என்ற வரிகளை
மேலும் மேலும் தோலுரித்துக்
காட்டியிருக்கிறீர்கள்.
பிய்த்து பிய்த்து சதை கிழிகிற மாதிரி
காட்டியிருக்கிறீர்கள்.
இறைவன்களும் சைத்தான்களும்
இப்படி
தத்ரூபம் காட்டிய போது
இன்னும் எந்த வல்லமை மிக்கவனை
வரவேற்றுக்காத்துக்கிடக்கவேண்டும்?
பாவங்களுக்கு தண்டனை கொடுக்க
எண்ணெய்க்கொப்பறைகள் காத்திருக்கின்றன
என்ற புராணங்கள் தான் கொப்பளங்களாகிக்
கிடக்கின்றன.
தேவ வசனங்களும் ஒலித்துக்கொண்டே
இருக்கின்றன.
மனிதம் இன்னும்
அன்பின் நிர்வாண தரிசனத்தை
பெறவே இல்லை.
மிரட்டி மிரட்டி
என்னைக் கும்பிடு
இல்லாவிட்டால் இதுவே தான்
உனக்கு எப்போதும்
என்று
காட்டுவதற்கு மட்டுமே
காட்சி தருவது தான் கடவுள்களா?
_____________________________________________________
சொற்கீரன்
செவ்வாய், 10 மார்ச், 2026
நான்.
வரலாறு
ஓடிக்கொண்டே இருக்கிறது.
நேற்றைய வழிகளை
புடைத்து பெயர்த்துக்கொண்டு
ஓடுகிறது.
இது அப்பட்டமாய்
குரல் கொடுக்கிறது.
நாளையப்படுகையில்
எது
என்னை மறிக்கும்?
எதற்கு
நான் பதுங்கி பதுங்கி
பாய வேண்டும்?
நேராய் என் உறுமல்கள்
கோரைப்பற்கள் எல்லாம்
தடை செய்பவற்றை
குத்திக்கிழித்துவிடும்.
கரையில் வரிசைகாட்டும்
பச்சைப்புல்லும்
பவள வண்ணப்பூக்களும்
என்னை மயக்கும் கவிதைகள் அல்ல.
நீல வானமும் மேகங்களும் கூட
என் முகவரிக்கு
எதிர் முகவரி காட்டும்
வலுவற்றவை தான்.
எனக்கு ஓட்டம் மட்டுமே
உயிர்.
என் குமிழித்துடிப்புகளில்
உங்கள் அத்தியாயங்களை
எழுதிக்கொள்ளுங்கள்.
தட தட வென்று ஓடும்
என் ராட்சச சக்கரங்களில்
உங்கள்
மயிற்பீலிகளை வைத்து
சோதித்துப் பார்க்காதீர்கள்.
உங்கள் இன்றைய சித்தாந்தங்களும்
நாளைய இலட்சியங்களும்
எனக்கு பொருட்டே அல்ல.
எதிர்ப்படும்
எல்லாவற்றையும்
எல்லோரையும்
நொறுக்கித்தள்ளிவிட்டு
ஓடுவதே
என் இயற்கை.
என் வலிமை.
ஒரு சட்டத்துக்குள் என்
சீற்றங்களை அடைத்து நீங்கள்
"நெய் ஓவியங்கள்'வரைந்து
அழகு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இது
அனக்கொண்டாவா?
டி ரெக்ஸ் டைனோசரா?
ட்ராகனா?
இல்லை
ஆயிரங்கால் பூச்சியின்
கோடி கோடி வடிவ
மூர்க்கமா?
சரி
இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.
அந்த வரலாறு எனும்
அமைதியான ஒரு ஆற்றோட்டம்
எனும் சொற்கொத்துகளை
தூக்கி எறியுங்கள்.
நான்
ஜென்ஸி...
ஜென்ஸி மட்டுமே.
நான் அணிந்திருக்கும்
கண்ணாடியைக்கூட
தூள் தூளாக்கி
முன்னேறுவேன்.
என் வேகம்
என் கண்விழிக்கோளங்களைக்கூட
எனக்கும் வெகு கோடி மைல்களுக்கு முன்னேயே
பிதுங்கிக்கொண்டு
விழுந்து விடச்செய்து விடும்.
எனக்கு
காட்சிகள் தேவையில்லை.
சாட்சிகள் தேவையில்லை.
நான்
யாருக்கும் எதற்கும்
பாடம் இல்லை.
எனக்கு உருவம் கிடையாது.
வடிவம் கொள்ள எந்த
ஜியாமெட்ரியும் கிடையாது.
அழிவும் ஆக்கமுமே
என் "அப்ஸ்ட்ரக்ட் அல்ஜீப்ரா"
வழி விடுங்கள்
என்னும்
கெஞ்சலும் கொஞ்சலும்
என் மொழியே அல்ல.
சிதிலங்களைக்கொண்டு
சித்திரம் காட்டும்
சிலிர்ப்புகளின்
பூகம்பமே நான்.
என்னை மறித்துக்கொண்டிருக்கும்
உங்கள்
அஞ்ஞானங்களையும்
விஞ்ஞானங்களையும்
அதே
அஞ்ஞானங்களையும்
விஞ்ஞானங்களையும்
கொண்டு
தவிடு பொடியாக்கிக்கொண்டு
ஓடும்
ஒரு அடாவடிப்பரிணாமமே
நான்.
___________________________________________
சொற்கீரன்