வியாழன், 5 ஏப்ரல், 2018

கடற் குருகுகள்

கடற் குருகுகள்
=====================================================ருத்ரா

வெள்ளித்திவலைகளை
தின்னத் திரியும்
கடற் குருகுகளே!
கொஞ்சம் உங்கள்
பசியலைகளின் படுதாக்களை
சுருட்டி வைத்து விட்டு
அந்த வெள்ளிக்கொலுசுகளில்
கேட்கும் ஏக்கத்தை
உற்றுக்கேளுங்கள்.
பசிபிக் மங்கையின்
பில்லியன் ஆண்டுக்கனவின்
குரல் இது.
நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை
நெளிந்து தாண்டிய‌
மானிடப்பரிணாமம்
கொண்டுவந்த சேதி என்ன?
ஓ! பறவைகளே
கூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு
கொத்தி கொத்தி
என்ன தேடுகிறீர்கள்?
இந்த மானிடம்
வெளிச்சமா?
வெளிச்சம் மறைக்கும் நிழலா?
நிழலில் ஒதுங்கத்தான்
மனிதன்
கடவுளைக் கண்டெடுத்தான்.
மனித வெளிச்சத்தில்
கடவுளும் கண்டுகொண்டது
தன் கடவுளை

===================================================

புதன், 4 ஏப்ரல், 2018

அவன் கண்டுகொண்டான்.



அவன் கண்டுகொண்டான்.
====================================ருத்ரா இ.பரமசிவன்

அவன் கண்டுகொண்டான்...
விலை மதிப்பற்ற பொருள்
அதோ வானத்தின் உச்சியில்
இருக்கிறது.
ஒரு மின்னல் வெட்டியபோது
அவனுக்குள் காமிரா ஃப்ளாஷ் அடித்தது!
ஆஹா!
கிம்பர்லிகள் ஆயிரக்கணக்காய்
மேலே சுரங்கம் வைத்துக்கொண்டு
வைர மழையை அவன் மீது
சாரலாய் தெறித்தது போல்
அடர்மழையை கொட்டிக்கவிழ்க்க‌
காத்திருந்தது போல்..
அவனுக்குள் பரவசம்
ரத்த நாளங்களை நிரப்பியது.
ஒளியின் ஊற்றுக்கண்
என்னென்னவோ அவனுக்கு
எழுதிக்காட்டி விட்டது.
அந்த பிரம்மாண்ட பவள உதடுகள்
பிரபஞ்ச பாளங்களாய்
கோடி பிரகாசங்களின் விழிப்பூக்களை
திறந்து திறந்து
எழுதி
அந்த வரிகளை அந்த மாணிக்கப்பலகையில்
பதித்து
கொடுத்து விட்டது.
அது அவன் கட்டளைகள்...
அந்த வரிகளில்
ஒரு பிஞ்சுக் "குவா குவா "க்களின்
ஒலிக்கீற்றுகள்
இசிஜி நெளிவுகள் போல்
ஓடிக்கொண்டிருந்தது.
பிறப்பு இறப்புகளின் வரி வடிவங்களா இவை?
அவன் புரிந்து கொண்டான்.
சீ..நான் இன்னும் அந்த அற்பப்புழு தானா?
"தனக்குவமை"இல்லாதவன்
ஒலிப்புகளை
இன்னும் வைரம் என்றும் மாணிக்கம் என்றும்
உவமித்துக்கொண்டு.....
என்ன ஈனப்பிறவி நான்!
அந்த உணர்வு அவனயே பிடுங்கித்தின்றது!
அவனையே
கழுமரத்தில் ஏற்றிக்கொண்டது போல்
தன் ஆசையின் குடல்கள் பிதுங்க‌
தன் வார்த்தைகளின் உடம்பு கிழிய‌
ரத்தக்குவியலாய்
கீழே வழிந்தான்.
மீண்டும் உடல் தரித்து
அந்த ஒளிப்பிழம்பை மட்டும்
தனக்குள் ஊற்றிக்கொண்டான்.
ஆண்டவன் கட்டளைகள் அங்கே
அவனுள்
சக உயிர் நேசமாய்
அமைதிக்கடலாய்
அன்பின் தெளிவாய் இறங்கியது
சாரம் அவனுள் கரைந்த பின்
அவன் கைகளில்
அந்த கட்டளைப்பலகைகள்
வெறும் சவங்களாய் கனத்தது.
கீழே அடிவாரத்துக்கு வந்து விட்டான்.
மக்களை மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கடிக்கப்போகிறோம்..
இந்த துயரக்கடலையெல்லாம்
பிளந்து கொண்டு
ஒரு புதிய உலகம் நோக்கி
மக்கள் இனி பயணிப்பார்கள்
என்றெல்லம்
வந்தவன் விக்கித்து நின்றான்.
அவன் கண்ட காட்சி!
அவனை துண்டு துண்டாய்
வெட்டிப்போட்டு விட்டு விட்டது.
மக்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள்.
தகத்தகவென
பனைமர உயரத்துக்கு
தங்கச்சிலைகளுடன்
ஊர்வலம் நடத்தினார்கள்.
உற்சாகம் கொண்டார்கள்.
கேட்டால் "ஹிரண்ய கர்ப்பன்" என்றார்கள்.
ஒன்று
தங்கத்தில் "முரட்டுக்காளை"
இன்னொன்று
பொன்னில் வடித்த "பெரிய கரடி"
கரடியும் காளையும் அங்கே
கடவுள் ஆனார்கள்.
அவற்றின் அன்றாட‌
முட்டு மோதல்கள்
வால் ஸ்ட்றீட்டின்
மின்னல் நரம்புகளாய்
க்ராஃபிக்ஸ் காட்டிக்கொண்டிருந்தன.
ஞானத்தை இங்கு எல்லோருக்கும்
பங்கு போட்டு கொடுக்க அனுப்பிய‌
அந்த "பங்குத்தந்தையின்" வார்த்தைகள்
இந்த "பங்குச்சந்தையில்"
கற்பழிக்கப்பட்டு விட்டன!
வங்கிகள் ஏடிஎம் மெஷின்கள் முன்
மானுடம் முழுதும்
கசாப்பு செய்யப்பட்டுக்கிடந்தன.
வெறிகளின்
கங்காஜலத்தில்
புண்ணியாவசனம் தெளிக்கப்பட்டு
சாக்கடை நாற்றம் தாங்க முடியவில்லை!
பணம் அடையாளம் இழந்து
பிணக்காடுகள் ஆகிக்கிடந்தன.
அரசியல் எனும் பெரிய ஆண்ட‌வனின்
கால்களில்
அதன் மிதிகளில்
வானத்துப்பெரிய இறைவன்
கூழாகிக்கிடந்தான்.
"கட்டளைப்பலகைகள்"
நொறுங்கிக்கிடந்தன.

=======================================================
25.12.2016





மெரினா

மெரினா
=======================================ருத்ரா

"அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்"
என்று சங்கப்புலவன் ஒருவன்
தன் ஏக்கங்களை
தன் கடந்த காலச்சுவடுகளை
கண்ணீர் சேர்த்து எழுதினான்.
எப்போதுமே
தமிழ் அப்படி ஓலைச்சுவடிகளுக்குள்
சுருண்டு கொண்டு விடுமோ
என்ற அச்சமும் கவலையும் தான்
"ஓ" மெரினா!
உன் மணல்துளிகள் எனும்
வைரப்படுகையில் புதைந்து கிடக்கின்றனவோ?
ஆனால்
தமிழ் வீரம் கொப்பளித்து
சுடர் பூத்த வைரங்களாய்
அந்த மணல் விரிப்பில்
ஒளி கிளர்ந்து இந்த‌
உலகமெல்லாம் ஒரு வெளிச்சம்
"அற்றைத்திங்கள் ஒரு வெண்ணிலவில்"
விரவிக்கிடந்ததே
அது இன்னும் அவியவில்லை!
இன்னும் அந்த‌
காளைகளின் கொம்புகளோடும்
அவற்றின் திமில்களோடும்
பின்னிக்கிடந்த ஆவேசம்
இங்கே மூண்டுகொண்டு தான் இருக்கிறது.
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா "
என்று "காவிரியை"
தன் மூச்சாக்கினவன் ..அதில்
தமிழின் நம்பிக்கையை ஆறாய்
பெருகசெய்தவன்
ஒரு பிச்சைக்கரம் ஏந்தி நிற்பவனாய்
அவலங்களில்  வீழ்ந்து கிடக்கும்
ஒரு வரலாற்றை சுமந்து நசுங்கிக்கிடக்கும்
தந்திரங்களை ..சூழ்ச்சிகளை
விதைத்த தமிழ்ப்பகைவர்கள் யார்?
விளங்கிக்கொண்டாயா
அருமைத்தமிழனே ?

மெரினா எனும் நிலா முற்றமே!
உன்னை
சுத்தப்படுத்தி வெறிச்சென்று
ஆக்கியிருக்கிறார்களே.
விலங்குகளை எப்படி வேண்டுமானாலும்
பூட்டிக்கொள்ளட்டும்.
"அணிலாடு முன்றில்"என்று எழுதினானே
புலவன்
இப்போது இப்படித்தான் எழுதுவான்
"அனலாடு முன்றில்..." ஆன‌
"ஓ" மெரினாவே! என்று.
இந்த மணலில் புதைந்து கிடப்பது
வெறும் சுண்டல் மடித்த காகிதங்கள் அல்ல!
உயிர் இழந்த கிளிஞ்சல் கூடுகளும் அல்ல!
நண்டுகளும் கடற்பாசிகளும் கூட அல்ல!
தமிழ்ப்புயலின் புறநானூறுகளும்
வீரத்தின் விடியல்களை
கருவுற்றுக்காத்திருக்கும்
அந்த ஒப்பற்ற
பூங்காலைப்பொழுதுகளும் தான்!
"கூவின பூங்குயில் கூவின கோழி"
அந்த மாணிக்கவாசகனின்
திருப்பள்ளியெழுச்சியில்
இந்த மணல் அரங்கத்தில்
கண்ணுக்குத்தெரியாத ஒரு
சமுதாய எழுச்சியின் தாண்டவம்
தடம் பதிப்பது தெரிகிறது.
நம்பிக்கை தான் எல்லாம்.
மக்கள் மக்கள் மக்கள்....எனும்
இந்தக்கடலும் வானமும்
கை கோர்த்து நர்த்தனம் புரியும்
காட்சி தெரிகிறது.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!

==================================================



செவ்வாய், 3 ஏப்ரல், 2018

முகம் எங்கே?

முகம் எங்கே?
===============================ருத்ரா இ பரமசிவன்.

எத்தனை முகமூடிகள்
மாட்டியிருப்பாய்?...
எத்தனை வேடங்கள்?
எத்தனை பேர் உன் வேடங்களில்
எத்தனை எத்தனை விதமாய்
ஏமாற்றப்பட்டிருப்பார்கள்?
என்றாவது ஒரு நாள்
உன்னைச்சுற்றி சுற்றிவந்து
அந்த முகமூடிகள்
கேள்விகள் கேட்டதுண்டா?
ஆனாலும் ஒரு நாள்
அப்படி அவற்றில் ஒன்று
இப்படி கேட்டது?
உன் முகத்தையே
மாட்டிக்கொண்டு
ஒரு நாள் வாழ்ந்து பார்.
முடியுமா உன்னால்?
இந்தக்கேள்வி
அவன் கன்னத்தில் அறைந்தது!
ஆமாம்
அவன் முகம் அவனுக்கு
மறந்தே போனது.
சின்னப்பிள்ளையாய்
பாற்சோறு சாப்பிடக்கூட‌
அடம் பிடித்த போது
விளையாட்டுக்காட்ட‌
கண்ணாடி காட்டினாள் அம்மா!
விவரமே தெரியாத போது
பார்த்த முகம் அல்லவா அது!
மறந்து போன முகத்தை
எப்படி பார்ப்பது?
அவனுக்கு உண்மையிலேயே
அவன் உண்மை முகத்தை
பார்க்க வேண்டும் என்ற
ஆவல் ஏற்பட்டது?
அதுவே வெறியாகி படபடப்பு ஆகியது.
எப்படி கண்டு பிடிப்பது?
அந்த முகமூடி கேட்டதற்காக‌
தன் முகத்தைப்பார்க்க‌
கண்ணாடியில்
உற்று உற்று நோக்கினான்?
கண்ணாடி முழுவதும்
அவனுக்கு தெரிந்தது
சூன்யம் மட்டுமே!
அவன் முகம் அங்கு இல்லை.
அவனுக்கு முகமெல்லாம் வியர்த்தது.
ஒரு திகில்
அவன் ரத்தம் புகுந்து
அவனை உறைய வைத்தது.
பயத்தில் என்ன செய்வது என்று
தெரியாமல்
கை முட்டியால்
ஓங்கி குத்தினான்.
கண்ணாடி சுக்கல் சுக்கல் ஆனது.
ஓவ்வொரு கண்ணாடித்துகளிலும்
ஒவ்வொரு பிண்டமாய்
அவன் முகம் தெரிந்தது.
ஆயிரம் ஆயிரம் கண்களாய்
அப்பிக்கொண்டு
அருவருத்த உருவம் கொண்ட‌
இந்திரன் போல தெரிந்தான்.
"இது என்ன கோரம்?
இது என்ன ஆபாசம்?
என் முகம் எங்கே?"
அவன் அலறல்
ஆகாயத்தையே பிளந்தது.

=======================================
17.10.2016ல் எழுதியது.


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

தேடு

தேடு
=================================================ருத்ரா

"நாட்களை எண்ணுவதன் அடையாளமே
ஜபமணிகளை உருட்டுவது!
இன்பமும் துன்பமும் மாறி மாறி
வருவதை விரல் தொட்டுப்பார்.
கவலைகளை
லாப நட்டக்கணக்காக்கி
அமைதி கொள்.
கண்ணீர்த்துளிகளையும்
பங்கு மூலதனமாக்கி
பகடை விளையாடு.
சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும்
உன் கையில் விழும் மலர்களாக‌
நீ கருதுவாயானால்
இந்த வானமே அடுத்த விநாடி
உனக்கு பொன்னாடை போர்த்தும்.
நம்பிக்கை..
நம் பூமி உருண்டையின்
கற்பனையான‌
அச்சுக்கோடு ஆகும்.
நீ நிலையாக நிற்கிறாய்.
ஆனாலும் சுழன்று கொண்டிருக்கிறாய்.
அதுவே நம்பிக்கை.
ஆயிரம் கோடிக்குப்பிறகு
ஆயிரத்தொன்றாவது கோடி வரவில்லையே
என்று
உனக்கு நெற்றிச்சுருக்கங்கள் எத்தனை பார்?
மத்தியானம்
கோவிலின் உருண்டை சாதம் கிடைத்தது.
இரவுக்கு
வயிற்றுப்பசியால்
வயிற்றில் சுருக்கம் விழுவதைப்பற்றி
அந்த பிச்சைக்காரனுக்கு கவலை.
நெஞ்சுக்கூடு துருத்த‌
பார வண்டி இழுப்பவனின்
வியர்வையால்
அந்த தெரு முழுவதற்கும்
கும்பாபிஷேகம் தான்.
ஆனால் அவனுக்கு
கூலியோடு
இந்த உலகின் துருவமுனை
முடிந்து நிற்கிறது...
நாம் எதற்கு பிறந்தோம்.
ஏன் சாகிறோம்.
இதயமும் மூளையும் கல்லீரலும்
நுரையீரலும்
நமக்கு "பாஷ்யம்" எழுதுகின்றன.
நமக்கு "புரிவதற்காக"
அவை எழுதப்படவில்லை.
இன்னும்
எழுத்து தொடர்கிறது.
அதன் "தலை எழுத்தை தேடி"
அந்த எழுத்தும் தொடர்கிறதோ..."
.........................

போதுமடா சாமி..
யாரோ எவனோ டைரியில்
கிறுக்கியதையா
இத்தனை நேரம் படித்தேன்.
அந்த பொட்டலக்காகிதத்தைப் போட்டு விட்டு
என் தேங்கா..மாங்கா பட்டாணி
சுண்டலைத் தேடினேன்.
மெரீனா மணலில்
அது சிதறிக்கிடந்தது.

==============================================
14.06.2015 ல் எழுதியது

சனி, 31 மார்ச், 2018

பிச்சை நன்றே பிச்சை நன்றே



பிச்சை நன்றே பிச்சை நன்றே
============================================ருத்ரா

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இந்த மூதுரை மொழிகள்
இன்று மூச்சிழந்து போயின.
"பிச்சை நன்றே பிச்சை நன்றே..நம்
கோவணம் இழந்தாவது பிச்சை நன்றே.
கோவணம் என்பது நம்
ஓட்டுகள்!
இன்று
நாம் தெரிந்த புதுமொழிகள்
இவை மட்டுமே.
தமிழ் தமிழன் என்றெல்லாம்
உணர்ச்சியை கொப்பளிக்கின்றவர்கள்
வெறும் கோமாளிகள் என்று
கொக்கரிக்கின்ற தமிளர்கள் எனும்
மந்தைக்கூட்டமே
எங்கணும் நாம் பார்க்கிறோம்.
கல் என்ற வினைச்சொல் மேலும் மேலும்
படி அறி தெரி தெளி
அப்புறம் தெறி
என்று ஒலிப்பதை
மறந்து
அதற்கு பொட்டிட்டு பூச்சூடி
குடமுழக்குகள் செய்து
கொட்டு முழக்குபவர்களே
இங்கு பெரும்பான்மை ஆகிப்போனார்கள்.
அதை வியாபாரமாக்கி விளம்பரமாக்கி
இன்னும் பெரிய கார்பரேட்டுகள் ஆக்கி
அதில் அரசியல் செய்து
ஓட்டுப்பெட்டிகளை
கொள்ளையடித்துப்போகும்
கூட்டங்கள் நம் முதுகுக்குப்பின்னே
மோப்பமிட்டு வருகின்றன.
இந்த சூழ்ச்சிக்காரர்கள்
தமிழ் நாட்டையே பலைவனமாக்கி
இந்தியா எனும் பெரும் நாட்டின்
ஒரு சுடுகாட்டு மாநிலமாய்
தமிழ்நாட்டை ஆக்கி விட திட்டம்
தீட்டுகிறார்கள்.
சாதி மத வெறியின் உள்  குத்துக்களை
அவர்கள்
ஆயுதமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
இந்த தமிழர்களோ
ஏதாவது ஒரு இலவசம் கிடைக்க‌
ஒரு கியூ கிடைத்தால் போதும்
அதில் போய் நின்று
கரையான் புற்றுகளாய் மாறி
தவம் கிடக்கிறார்கள்.
"வெறும் சோற்றுக்கோ வந்தது
இந்த பஞ்சம்" என்று
எரிமலைக்குழம்பை உமிழ்ந்த தமிழ்
இன்று மாற்றான்களின்
எச்சில்களாய் மாறிக்கிடக்கும்
அவலங்கள் எப்படி வந்தன?
தமிழனின் சுடர்வீசும் அறிவுக்கண்டமான‌
குமரிக்கண்டமே
அன்றொரு நாள் கடலில் மூழ்கியது!
அதன் மிச்ச சொச்சமாய்
இருக்கின்ற நம் நிலத்துண்டமும்
இன்னொரு குமரிக்கண்டமாய்
ஒரு "அறியாமைக்கடலில்" மூழ்கி
மறைந்து போய்விடுமோ
என்ற அச்சமே எங்கும் நிலவுகின்றது.
நம் உயிர் ஆதாரமான‌
"காவேரி"யே
காவு கொடுக்கப்பட‌
இந்த சுயநலக்கும்பல்கள்
கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
உண்மைத்தமிழனே
நீ பொங்க வேண்டிய தருணம் இது!
மொட்டை முனிய சாமிகளுக்கு
பொங்கல் வைத்து கெடா வெட்டி
ஆடிப்பாடும் நேரம் அல்ல இது!
விழிப்பாய் தமிழா!
எழுவாய் தமிழா!

==========================================================


வியாழன், 29 மார்ச், 2018

காவேரி


காவேரி
==============================ருத்ரா

போதும் ஆடுபுலி ஆட்டம்.
ஓட்டு வங்கியை
காவேரியில் பதுக்கி வைத்து
இங்கே
எத்தனை முகமூடிகள்?
அவன் தான் காரணம்.
இல்லை
இவன் தான் காரணம்.
அந்தக்கட்சியின் துரோகம் இது.
இந்தக்கட்சியின் கையாலாகாத தனம் இது.

எது எப்படியோ
வெள்ளம்போல வருகிற தண்ணீரை
வரப்புகளும் மொட்டைவாய்க்கால்களும்
எச்சில் படுத்தியது போக‌
எல்லாம் கடலுக்குள் சமாதியாகவிட்டு
வறண்ட காலத்தில்
ஒப்பாரி வைக்கும்
விவசாயிகளின் அறிவுநுட்பம் அற்ற‌
கையறு நிலை இது.

மற்றும்
டெல்லியே காரணம்.
அதுவும் இந்த
காவிரியைப்பார்க்கிறது
வேறு கண்ணில் பார்க்கிறது.
கற்பனையில்
மதவெறி சுழித்து ஓடும்
ரத்தங்களின் ஆறாய்.

கர்நாடகமும் தமிழ்நாடும்
நூறு கைள் முளைக்க
அந்த நூறுகைகளையும்
முறுக்கிக்கொண்டு
பாகுபாலி கணக்காய்
வாள்வீசி ரத்தம் குடித்து
அரசியல் சினிமா
அரங்கேற்றம்
நடத்தும் காட்சி இது.

இந்த மனிதர்கள் எல்லாம்
முகமூடி கழற்றி ஒரு நாள்
அந்த நீரையாவது குடிக்கலாமா
என்று தவியாய் தவிப்பார்கள்
ஆம் அது..
தங்கள் சிறுநீரையே.

அப்போது காவிரி வறண்டு
அதன் ஊற்று தூர்ந்து
பாலைநிலம் மட்டுமே
அவர்கள் காலடியில் இருக்கும்.
மக்களின் மற்றும்
கால்நடைகளின்
எலும்புக்கூடுகளின் குப்பையே
அங்கு சிதறிக்கிடக்கும்.

=================================================