ஒரு சொல் கேளீர்
______________________________
மனிதம் என்பது
இன்னும்
ஏன் இங்கே புகை மூட்டம்?
அச்சம் என்னும்
அமில மழை
கடவுள் உருவில்
பெய்து கொண்டே
இருப்பதில்
மனிதத்தளிர்
பொசுங்கிக்கொண்டே
போகிறது.
பிளவு படுத்தும்
மந்திரங்களில்
மண் மூடிப்போன
சிந்தனைகள்
கண் மூடிப்போயின.
வெளுக்கும் என்று
கிழக்கு நோக்கினோம்.
இந்த உழக்கின்
கிழக்கு மேற்கில் எல்லாம்
சாதிகளே
அறுவாள் தூக்கின.
இதன் ரத்தச்சேற்றின்
மகசூல் எல்லாம்
மடமையும் மூடத்தனங்களும்
தான்.
இந்த ஓட்டாஞ்சல்லிகள்
பழுக்கும் என்று
இலவு காத்த கிளிகள்
பருந்துக்கே
இரையாகக்காத்திருக்கின்றன.
மனிதா!
கேட்கிறதா உனக்கு
உன் இதயத்துடிப்புகள்?
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக