வியாழன், 8 அக்டோபர், 2020

ஆர்த்தெழு! தமிழா!

 ஆர்த்தெழு! தமிழா!

=====================================ருத்ரா


மனிதனை

அவன் சமுதாயத்தை

மேலும் மேலும் மேம்படச்செய்ய‌

மனிதனே தான்

மாற்றங்களுக்கு முரண்டு பிடிக்கவேண்டும்.

அதற்கு தடையாய் இருக்கும்

சாதி மதத் தடங்கல்களை 

அவன் தவிடு பொடியாக்க வேண்டும்.

அதற்கு இடையூறு செய்யும்

வர்ண மயக்கங்களை

அழித்தாக வேண்டும்.

ஓட்டு எனும் ஆயுதம் கையில் வரும்போது

உன் போர்க்களம்

தெளிவாக இருக்க வேண்டும்.

சினிமாவின் நுரைக்குமிழிகளை

நொறுக்கித்தள்ள வேண்டும்.

தமிழும் தமிழ் இனமும்

குப்பைகளையாய் கருதப்பட்டு

அப்புறப்பட்டுத்தப்படும் அபாயம்

உன் தோள்களில் தொங்கிக்கொண்டிருப்பதும்

அறியாமல்

உன் ஓட்டு காணாமல் போகும் 

பேராபத்தும் புரிந்து கொள்ளாமல்

இருக்கின்ற‌

தமிழா

நீ என்ன செய்யப்போகிறாய்?

ஒரு அரச்சனை செய்து விட்டால் போகிறது.

ஒரு யாகம் செய்தால் சரியாகி விடும்..

என்ற கானல் நீர் நோக்கி ஓடும்

கரப்பான் பூச்சி அல்ல நீ!

அக்கினிச்சிறகு விரித்து

அதர்மங்களை பொசுக்கும்

ஊழி நெருப்பே நீ!

தமிழா!

இந்த இருட்டுகள் எல்லாவற்றையும்

துடைத்தெறி!

துடித்தெழு தமிழா!

இதுவே தருணம்.

தப்பினால் மரணம்.

கொரோனாக்கள் திசை மாற்றும்.

மொழியை அழித்தால்

விழியை அழிக்கலாம்.

விழிகள் அழிந்ததால்

வழிகள் ஏது? வாழ்க்கை ஏது?

பாழ்வெளி ஆகிடும்  தமிழ் நாடு.

அதில் ஆள்வது இனி

நாமே என்று 

ஆரியம் இங்கே ஆலவட்டம் போடுகிறது.

தமிழா!

உன் தமிழ் தான் 

உன் ஆயுதம்.

அதன் உயிரெழுத்தும் மெய்யெழுத்துமே

உன் பாசறை.

ஆர்த்தெழு!தமிழா!

ஆர்த்தெழு!


============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக