வியாழன், 8 ஜூன், 2023

அகழ்நானூறு 46

 அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக