வெள்ளி, 19 மே, 2017

"போர் வரும்போது......"

"போர் வரும்போது......"
============================================ருத்ரா

"போர் வரும்போது...."
இந்த சொற்கள் கேட்டதும்
அரங்கம் முழுதும் சீட்டி ஒலிகள்.
மோசஸ் செங்கடலை பிளந்து காட்டியது போல்
வழி பிளந்து வெளிச்சம் வந்தது.
அலைகள் சுருண்டு வழிந்து வழிந்து
ரசிகர்களின் முகத்தில்
பொங்கிக்குதிக்கும் சுனாமி!
ஆகா! தலைவர் கை காட்டிவிட்டார்.
தேர்தல் தான் போர்...
இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்.
"அடித்தளமே சிதைந்து கிடக்கிறது.
சிஸ்டமே கெட்டுப்போச்சு.
ஜனநாயகத்தைக் காணோம்
.....................
........................"
சூப்பர் ஸ்டாரின் குமுறல்
அந்த குகையை உடைத்துக்கொண்டு
வந்து விட்டது.
இமயமலைக்கு பயணம் வேண்டியதில்லை.
இருட்டிக்கிடக்கும்
அந்த வாக்குப்பெட்டிக்குள்
நாம் நுழைந்தாக வேண்டும்.
"நான் கபாலிடா" என்பதையும் விட‌
ஒரு மில்லியன் வாட்ஸ் வெளிச்சம் ஏந்தி
சொல்கிறார்.
"நான் பச்சைத் தமிழன்"
அது பொய் இல்லை
தமிழ் மொழி மட்டுமே
எல்லா மொழியாகவும் ஒலிக்கும்.
அது ஒலி அல்ல.
அது உணர்வு.
அது நிமிர்வு.
அது எல்லா மரணங்களையும்
துடைத்து அழிக்கும்.
அது அமுதம்.
அது புத்தம் புதுக்குமிழியாய்
எரிமலைப்பிஞ்சுகளின்
எழுத்துக்களாய்
எழுந்திருக்கும்!
அவர் குரலில்
தமிழின் "டெசிபல்"கள்
எல்லா ஆதிக்கத்தையும்
அடித்து நொறுக்கும்!
அவர்கள் இப்போது ரசிகர்கள் அல்ல.
நம் மண்ணில் தலைகீழாய் தொங்கிக்கிடக்கும்
இருட்டு வௌவ்வால்களை
வெளிச்சப்பிரளயம் ஆக்கப்போகும்
ஒரு புதிய நம்பிக்கைக்கடல் !
அவர் சொல்கிறார்.
போர் வரும்போது...
நம் வலிமையை திரட்டிக்காட்டுவோம்!
இப்போது
கடமை இருக்கிறது.
தொழில் இருக்கிறது.
வாழ்க்கை இருக்கிறது.
ஆம்!
உங்களுக்கும் எனக்கும் தான்.
கடமை இருக்கிறது..
.............................
................................
அவ்வளவு தானா
படம் முடிந்து விட்டதா?
சிலிர்ப்புடன்
நெருப்பின் உயிர்ப்புடன்
தலைவரை பார்த்தது எல்லாம்
"ஹோலோகிராஃபிக் பிம்பமா?"
இந்தக்கேள்வி
ரசிகர்களின்
கனவுக்குள்
ஒரு நனவாக‌
எரிந்து கொண்டுதான் இருக்கிறது!
இது வெறும்
2.0 ன் முன்னோட்டம் அல்ல?
ஜனநாயகம் எங்கே
என்று கேட்டாரே!
அது ஒரு போரின் முன்னோட்டம்!
அமித்ஷாக்களும்
அவர்கள் போன்றவர்களும்
மயக்கத்தோட்டாக்களைக்கொண்டு
பிடிக்க‌
சுற்றி சுற்றி வந்து
இந்த வரிப்புலியிடம்
வரி விளையாட்டுகள் கொண்டு
வலை வீசி விடாமல் இருக்க.....
ஓ! ரசிகத் தமிழ் சிங்கங்களே!
தூங்கி விடாதீர்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்!

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக