வெள்ளி, 20 ஜனவரி, 2017

வாடி வாசல்


வாடி வாசல்
=====================================ருத்ரா இ பரமசிவன்.
தமில் என்றும்
டமில் என்றும்
கிண்டல் அடிக்கும்
மொழியாய் இற்றுக்கிடந்தது
எழுந்து கொண்டது.
கொம்பு சிலிர்த்து ஒற்றுமையின்
நெம்பு கோலை
உயர்த்தி நின்றது.
லட்சக்கணக்காய்
மின்மினிப்பூந்தோட்டமாய்
சென்னை கடற்கரை
செல்களில் உயிர்த்த‌
செம்மொழிப் பூங்காவென‌
ஜெயித்து நிற்கிறது.
"முளிதயிர் பிசைந்த மென்காந்தள் விரல்"
என பனையேட்டில்
குறுந்தொகைப்பாடலில்
குடியிருந்த‌
பூவின் பெண்கள்
புயலின் கடலாய்
புன்னகை செய்கிறது.
"காளையின் படம் வரைந்து பாகங்களைக்குறி"
என்ற கேள்வித்தாள்
இந்த மாணவ நெஞ்சின் அலைகளில்
அது தமிழ் வீரத்தின் மாண்பு காக்கும்
விடைத்தாள் ஆகியிருக்கிறது.
சுட்டெரிக்கும் எரிமலை  வேண்டாம்
சுடுகாட்டுச் சினமும் வேண்டாம்
"தமிழுக்கும் அமுது என்று பேர்"
என்ற குளிர் நினைவே
நம் நரம்புக்குள்
எண்ண ஓட்டத்தின் "லாவா"வாக
ஓடுகிறது.
வெறியின் சத்தமோ ரத்தமோ
இல்லாத தமிழ்போர் இது!
வாடி வாசலே
இன்று தமிழனின் "இதய வாசல்"

==================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக