ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

போதை

4 செப்டம்பர் 2016

போதை
============================================ருத்ரா

காதை கூர்மையாக்கு.
கண்களை அகலமாக்கிக்கொள்.
அப்புறம் மூடிக்கொள்.
அவர் சொல்லிக்கொண்டே போவதில்
உன் பங்குக்கு
என்ன இனிப்புத்துண்டுகள் விழுகிறது
என்று கேள்.
உனக்கு புரியாததை
நீ கேட்கும்போது
உச்சு கொட்டிக்கொள்.
உனக்காக ஒரு சதுரம் வெட்டி
ஒரு சன்னல் செய்து
உனக்கு மட்டுமே கிசு கிசுப்பது போல்
தெரியுமே
அப்போது வேகமாக தலையாட்டு.
உன் பக்கத்தில் இருப்பவர்களும்
அப்படித்தான் தலையாட்டிக்கொண்டிருப்பதாக‌
உனக்குப் படும்.
உன்னிடமிருந்து
ஒரு நீண்ட பெருமூச்சு கிளம்பும்
ஒரு தெளிவு ஏற்பட்டதாய்.......
உனக்கு
ஒரு  ஆறுதல்  கிடைத்து விட்டதாய்.........
அப்போது
அப்பாடா என்று
உன் உடுப்புகளையெல்லாம்
உதறிக்கொண்டு எழுந்து நடப்பாய்.
அப்போது உனக்கு
இந்த உலகமே கால் தூசு.
பெண்ணே !
வாழ்க்கையின் பொருளாதாரம்
உனக்கு தந்தவை
எத்தனை அடிகள் உதைகள் ?
இந்த "ஆத்மீக சொற்பொழிவை"
சுமந்து கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாய்
வேதாளத்தை வெற்றிகொண்டு
சுமந்து கொண்டு போகிற
விக்கிரமாதித்தன் போல நுழைகிறாய்.
வீட்டுக்குள் கால் வைத்ததும்
வாழ்க்கையின் கன பரிமாணம்
இரும்பு சங்கிலியாய்
உன் கால்களை பிணித்துக்கொள்கின்றனவே !
அந்தக்கூட்டத்தின்
போதையெல்லாம் எங்கே போயிற்று?

அதோ அவனைக்கேள்.
அவனும் வானில் மிதந்து
தள்ளாடி தள்ளாடி வருகிறான்.
லேசாய் காக்காய்சசிறகு போல
வந்து வீட்டுக்குள் விழுகிறான்.
நாளை தான் அவனுக்கு
போதை தெளியும்.
மறுபடியும் அவன்  செக்கு மாடாய்
ஒரு பரிணாமம் எடுத்தாக வேண்டும்.

நாளை மறுபடியும்
நீ கோவிலுக்கு போய் விட்டு வா.
அவன் அங்கே போய்விட்டு
வருவான்.

வாழ வேண்டும் என்ற
உயிர்த்தேவை  கூட
இங்கு ஒரு போதையின் மீது
பயணிக்க வேண்டியிருக்கிறது.

================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக