சுண்டல் காகிதங்களில்
__________________________________
மெரீனா கடற்கரையில் கிடக்கும்
சுண்டல் காகிதங்களில்
கிறுக்கியிருக்கும் வரிகளாய்
மக்களின்
ஆற்றாமை
மனதைத் துன்புறுத்துகின்றன.
தேர்தல் கணிப்பொறிகளின்
பட்டியல் எல்லாம்
ஏமாற்று வேலை என்று
தெரிந்த பின்னும்
திருப்பதியில் லட்டு வாங்குபவர்களின்
கியூவும்
டிக் டாக்கில்
குத்தாட்ட கோமாளித்தனங்களும்
நடிகனின் அரிதார சாம்ராஜ்யத்துக்கு
பால் குடம் சுமப்பவர்களும்
இவை
ஈ மொய்த்த
திருவிழாக்கால மிட்டாய்கள்
என்று தெரிந்தும்
ஈக்களோடு போட்டி போட்டு
மொய்ப்பவர்களும்...
குவிகின்ற கோரக்காட்சிகளே
எங்கும்..எங்கும்..எங்கும்..
__________________________________
சொற்கீரன்
மூடகங்கள்
_______________________________________
மக்களின் முதுகெலும்புகள்
நிமிரும்போது
இவை வளைந்து கொள்கின்றன.
கூலி கொடுப்பனின்
மேற்கூலிகளும்
மிரட்டல்களும்
உண்மை அரசியலை
முடமாக்க
முனைகின்றன.
நாடு எனும்
வீடு தீப்பற்றி எரியும் போது
சூடம் சாம்ப்ராணிச் செய்திகளே
கொட்டை எழுத்துக்களில்
கும்பமேளா நடத்துகின்றன.
அந்த கும்பமேளாவிலும்
உயிர் தொலைத்தவர்கள் எல்லாம்
கைலாசம் சென்ற பாக்கியவான்கள்
என்று
தோரணம் கட்டுகின்றன.
உண்மையை பொய்மைகளில்
மூடி மூடி மறைக்கும்
இவை
மூடகங்கள் தானே அன்றி
ஊடகங்களே அல்ல.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக